யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் விமான படையினருக்கு தேவையான காணிகளை சுவீகரித்துக்கொண்டு அதற்கு நியாமான இழப்பீட்டை காணி உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சர் பிமல் ரட்ணாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 20ஆம் திகதி பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி அது தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.
அதன் அடிப்படையில் விரைவில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 36 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பலாலி வீதியை நாம் முழுமையாக நாம் திறந்து வைத்தோம். அதேபோல் காணிகளையும் விடுவிப்போம்.
கடந்த காலங்களில் வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் அதன் உரிமையாளர்களை விவசாயம் செய்ய மாத்திரமே அனுமதிக்கப்பட்டனர்.
City & Local Guides
தற்போது அந்த காணிகளை முழுமையாக விடுவித்து அந்த காணிகளில் வீடமைத்து அதில் உரிமையாளர்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டவுள்ளனர்.
அத்துடன் பலாலி கிழக்கில் உள்ள காணிகளை விடுவிப்பதுடன், ஏனைய பகுதிகளில் முப்படையினர் வசமுள்ள சிறிய சிறிய காணிகளையும் முற்றாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை காணிகளை விடுவிக்க முடியாத நிலைமைகள் ஏற்பட்டால், அதற்கான காரணங்களை ஆராய்ந்து, அதற்கு தீர்வினை பெறுவது அல்லது, அதற்கான இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்
