பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிடம் இருந்து கைத்துப்பாக்கியை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியின் உப செயலாளரும், வேலணை பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் கோரிக்கை விடுத்தார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பெண்களை அச்சுறுத்தும் விதமாக கைத் துப்பாக்கியை பயன்படுத்தியது மிக ஆபத்தான விடயம். உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கை துப்பாக்கியை, தங்களுடைய பிரச்சினையை கேட்பதற்காக சென்ற பெண்களிடம் காட்டி அச்சுறுத்தியது என்பது எமது இனத்திற்கே செய்த பெரும் துரோகமாகத்தான் நாங்கள் எண்ணி பார்க்கவேண்டி இருக்கிறது.
தனது பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை பெண்களுக்கு எடுத்துக்காட்டுவதாக இருந்தால் அவரிடம் முரண்படுபவர்களுக்கோ கருத்து, செயற்பாடுகள் மற்றும் இனம் சார்ந்து கருத்துகளை கதைக்கும் போது எவ்வாறு நடந்து கொள்வது என்பது மிகவும் தமிழினத்திற்கு பாதிப்பான விடயமாக காணப்படுகிறது.
எனவே இதை உணர்ந்து அவருக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி மீளப்பெறப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடமும் பாராளுமன்ற சபையிடமும் கோரிக்கை விடுக்கின்றோம்.
அவர் எதையும் மதிக்காமல்,அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை சிந்திக்காமல் எதற்காக பாராளுமன்றத்தின் தேர்தலுக்கு போட்டியிட்டார் என்பதை சிந்திக்காமல், எமது மக்களுடைய பிரச்சனைகள், குறைபாடுகளை பாராளுமன்றத்தில் கதைக்காமல் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளையும் தனது பாதுகாப்பை கருதி இந்த துப்பாக்கியை பெற்றுக் கொண்டு இவ்வாறு கேவலமாக நடந்து கொள்கிறார். எனவே அதை மீளப் பெற வேண்டும் என தெரிவித்தார்.