யாழ்ப்பாணம் , நெடுந்தீவில் பல வருடங்களுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க கோரி கவனயீர்புப் போராட்டம் நெடுந்தீவு மகாவலித்துறையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது, பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளை ஏந்தியவாறு கருப்பு துணிகளை கட்டியும் உழவு இயந்திரத்தில் கேலிச்சித்திரங்களை காட்சிப்படுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து மகாவலி இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு பிரதேச செயலகம் வரை மக்கள் பேரணியாக சென்று பிரதேச செயலரிடம் ஜனாதிபதி, ஆளுநர், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கான மகஜர்களைக் கையளித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கும் போது,
கடந்த பல தசாப்த காலமாக நெடுந்தீவில் காணப்படும் குடிநீர் பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் மக்கள் பல இன்னல்களை அனுபவித்தவருகின்றனர்.
வரலாற்று பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான காணப்படும் நெடுந்தீவில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாக அரசாங்கம் குறிப்பிட்டு வருகின்ற போதிலும் இதுவரையும் எவ்வித நடவடிக்கைகளையும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கவில்லை.
குறிப்பாக தற்போது கடல் போக்குவரத்தில் ஈடுபடும் நெடுந்தாரகை படகில் நூறு பேரை மாத்திரமே ஏற்றிச்செல்லும் நிலை காணப்படுகிறது.
அதிலும் என்பது பேர் அரச உத்தியோகத்தர்களாக இருப்பதனால் பொதுமக்கள் இருபது பேரை மாத்திரமே ஏற்றிச் செல்லமுடிகிறது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் பயணிக்க முடியாது புறக்கணிக்கப்படும் நிலை தொடர்ந்து காணப்படுகிறது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.