யாழ்ப்பாண இராச்சியத்தினுடைய சங்கிலிய மன்னனின் மந்திரி மனையின் வரலாற்றை பேணி பாதுகாப்பதற்கான செயற்பாடுகளில் அனைத்து தரப்பினரும் இணைந்து கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நல்லூர் மந்திரிமனை அழியும் அபாயத்தில் இருந்த நிலையில் அதனை புனரமைப்பு செய்வது தொடர்பாக தற்போது நம்பிக்கை பொறுப்பாளர்களும் தொல்லியல் திணைக்களமும் உடன்பாட்டிற்கு வந்திருக்கிறன.
இரு தரப்பு கலந்துரையாடலின் பின்னர் பொது மக்களின் நிதியை பெற்று இதனை புனரமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அதற்கான நிதி தொல்லியல் திணைக்களத்திடம் இல்லை.
தொல்லியல் திணைக்களம் அந்த திருத்த பணிகளைச் செய்யும். அதற்கான நிதிகளை நாங்கள் திணைக்களத்திற்கு வழங்க வேண்டும். அதற்கு ஒரு பொது அமைப்பாக நாங்கள் இணைந்து இதனை செய்ய வேண்டும். சூழல் கனிந்து வந்துள்ளது. ஆகவே பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தொல்லியல் திணைக்களம் நெதர்லாந்து நாட்டின் நிபுணர்களை தொடர்பு கொண்டு நல்லூர் மந்திரி மனை இருக்கக்கூடிய இடங்களை ஸ்கான் செயல்பாட்டை செய்தனர். திணைக்களம் அந்த செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
நல்லூர் மந்திரிமனையை எவ்வாறு செய்யலாம் என்பதை பொதுமக்கள் கருத்துக்களை முன்வைக்க முடியும்.
இதில் எந்த அரசியல் சம்பந்தமும் கிடையாது. இந்த பகுதியில் வசிப்பவன் என்ற அடிப்படையிலும் முன்னாள் மாநகர சபை ஆணையாளர் என்ற அடிப்படையிலும் மாகாண சபை அவைத் தலைவர் என்ற வகையில் இதனை கையாளுகிறேன். இதில் எந்த அரசியல் கலப்பும் கிடையாது என்றார்
