காலி – மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
(54 ஆம் அத்தியாயமான) சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த கட்டளை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், “மஹமோதர” என்ற பெயரில் இந்த சிறைச்சாலை நிறுவப்படவுள்ளதுடன், இதன் அதிகாரப் பிரதேசம் முழு இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்ட மஹமோதர வைத்தியசாலையின் ஒரு பகுதியில் தற்காலிக அடிப்படையில் இந்த சிறைச்சாலையை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு, தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் இன்று (08) முற்பகல் 7.30 மணிக்கு விசேட கூட்டமொன்றிற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் குறித்தும், ஏனைய சிறைச்சாலைகளில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்
