அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் 6 மாதங்களை கடந்ததுள்ள நிலையில், வளைகுடா பகுதியில் அமெரிக்கா இன்று அதிகாலை நடத்திய தாக்குதலால் போர் பதற்றம் புதிய உச்ச கட்டத்தை எட்டியுள்ளது..ஹோர்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ள ஈரானின் லாரக் தீவில் உள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் கடும் கோபம் அடைந்த ஈரான், இதற்காக கடுமையாக தண்டனை கொடுப்போம் என அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகவே வளைகுடா நாடுகளில் உள்ள கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனை அண்மையில் ஈரான் மூடியதால் உலகமே ஸ்தம்பித்து போனது. தற்போது ஓரளவு நிலைமை சரியானாலும், இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடிகளை வைத்தே பிரச்சினைக்கு காரணமாக இருந்தது.
இந்த சூழலில் ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் மீண்டும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்றால் அமெரிக்கா சும்மா இருக்காது” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்து இருந்தார். இந்த சூழலில் ஈரானின் தலைநகர் தஹ்ரானில் இருந்து தென்கிழக்கே சுமார் 1,100 கி.மீ தொலைவில், ஹோர்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ள லாரக் தீவு மீது அமெரிக்கப் படைகள் இன்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தின. ஜூலை மாதத்தின் பிற்பகுதிக்கு பிறகு, ஈரானிய நிலப்பரப்பைக் இலக்காகக் கொண்டு அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் இது என்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியின் முக்கியக் கடல் பாதையில், கடல் கண்ணிவெடிகளை ராக்கெட்டுகள் மூலம் வீச ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தயாராகி வந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதை அமெரிக்கப் படைகள் கண்டறிந்ததைத் தொடர்ந்தே, லாரக் தீவில் இருந்த ஈரானின் 2 ஏவுகணை ஏவுதளங்கள் தகர்க்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
