உங்கள் காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் , அந்த காணிகளை பெற்று தருவோம். உங்கள் காணிகளை பலவந்தமாக வைத்துக்கொள்ளும் எண்ணம் தேசிய மக்கள் சக்தியினருக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
வலி.வடக்கு பிரதேசத்தில் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை மீள தம்மிடமே ஒப்படைக்குமாறு அப்பகுதி மக்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு செல்லும் பாதைக்கு அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் போராட்டம் நடைபெற்ற இடத்தில் சென்று சந்தித்ததுடன் , பின்னர் அவர்களின் பிரதிநிதிகள் சிலரை தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு அழைத்து , சக நாடாளுமன்ற உறுப்பினர் ச. ஸ்ரீபவானந்தராசாவுடன் இணைத்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார்.
அதன் போது, காணி உரிமையாளர்களிடம் நாடளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் கருத்து தெரிவிக்கும் போது,
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், மக்களுக்குரிய காணிகள் கட்டங்கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றது. இது விடயத்தில் நாம் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகின்றோம்.
மக்களுக்கு ஒப்படைக்கப்படும் காணிகளை உரிய வகையில், உரிய ஆவணங்களுடன் கையளிக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினை நிரந்தரமாக தீரும். உங்கள் வசம் ஆவணங்கள் இருந்தால் நிச்சயம் உங்களுக்குரிய மண் உங்களுக்கே சொந்தமாகும்.
எமது ஆட்சி மக்களுக்கானது, எனவே, மக்களின் சொத்துகளை பலவந்தமாக வைத்துக்கொள்வதற்குரிய எண்ணம் எதுவும் இல்லை.
தேசிய பாதுகாப்புக்கு அத்தியாவசியம் அற்றது எனக் கருதப்படும் இடங்களை விடுவிக்குமாறு எமது அரசாங்கம் உரிய தரப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. எனவே, நிச்சயம் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என தெரிவித்தார்.
அதேவேளை , கடந்த மாதம் இடம்பெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச.ஸ்ரீபவானந்தராசா தெரிவித்திருந்த நிலையில் , தமிழ் – சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு அப்பகுதி விடுவிப்பு சாத்தியமாகும் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் , காணிகள் விடுவிக்கப்படவில்லை.
அதேபோன்று பலாலி இராஜஇராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆலயத்திற்கான பாதை இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில் , தனியார் காணிகள் ஊடாக தற்காலிக பாதை ஊடாகவே ஆலயத்திற்கு மக்கள் சென்று வருகின்றனர்.
ஆலயத்திற்கு செல்லும் பாதையில் இராணுவத்தினரின் வாகன திருத்தகம் அமைந்துள்ளதால் குறித்த பாதை விடுவிக்கப்படவில்லை. அதில் உள்ள வாகன திருத்தகத்தினை அகற்றி பாதையை விடுவிக்க வேண்டும் என கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன போதிலும் அந்த பாதை விடுவிக்கப்படவில்லை
இது தொடர்பில் , வலி. வடக்கு பிரதேச சபையினர் கடந்த ,மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற அமர்வில் , இராணுவத்தினரின் வாகன திருத்தகத்தை அகற்றி , ஆலயத்திற்கு செல்லும் பாதையை விடுவிக்க வேண்டும் என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியிடம் கடிதம் ஊடாக கோரிக்கை விடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.