முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் கம்பஹா – மல்வானை பகுதியில் அமைந்துள்ள இல்லத்தில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் (IUSF) தங்களின் முற்றுகைப் போராட்டத்தை மூன்றாவது நாளாகவும் இன்றும் (சனிக்கிழமை) தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்தது. இதன் பின்னணியிலேயே, அதிகாரிகள் தரப்பில் இருந்து தகுந்த தீர்வு கிடைக்கும் வரை அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என முடிவெடுத்து, அவர்கள் 3வது நாளாகவும் மாளிகை வளாகத்திற்குள் தங்கியிருந்து போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கம்பஹா – மல்வானை பகுதியில் சுமார் 16 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான சொகுசு இல்லம் மற்றும் காணியை அரசாங்கம் உடனடியாக முழுமையாகப் பொறுப்பேற்று, பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிட வசதிகளுக்கோ அல்லது பொதுமக்களின் நலத்திட்டப் பயன்பாடுகளுக்கோ வழங்க வேண்டும் என்பதே மாணவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
நாட்டின் பல்கலைக்கழகங்கள் தங்குமிட வசதி, ஆய்வுகூட பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், ஊழல் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் இவ்வாறான அரச சொத்துக்கள் வீணாகக் கைவிடப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என மாணவர் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் (FCID) இந்த சொத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. எனினும், நீதிமன்ற விசாரணைகளின் போது இந்த இல்லத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பதை அடையாளம் காண முடியாமல் போனதுடன், பசில் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினரும் இதற்குத் தாம் உரிமையாளர் அல்லவென மறுத்திருந்தனர்.
நீண்டகாலமாக “உரிமையாளர் அற்றது” என வர்ணிக்கப்பட்டு வந்த இந்த மாளிகை, கடந்த 2022ஆம் ஆண்டு ‘அரகலய’ மக்கள் போராட்டக் காலப்பகுதியின் போது தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த வியாழக்கிழமை பொலிஸாரின் வீதித்தடைகளையும் மீறி காணிக்குள் நுழைந்த பல்கலைக்கழக மாணவர்கள், இந்த இல்லத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தொடர் ஆக்கிரமிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தற்போது அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பதற்றமான சூழலும் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
