அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு, பலாலி கிழக்கு உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்த நிலையில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, வலிகாமம் வடக்கு மக்கள் பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (ஓகஸ்ட் 30) 11 ஆவது வாரமாகவும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமது வாழ்வாதாரக் காணிகளில் இராணுவத்தினர் விவசாயப் பண்ணைகளையும் வர்த்தக நிலையங்களையும் அமைத்துபயன்படுத்தி வரும் நிலையில், தாம் சொந்த நிலங்களையும் வீடுகளையும் இழந்து நிர்க்கதியாக வாழ்ந்து வருவதாகப் மக்கள் தெரிவித்தனர்.
கடந்த 36 வருடங்களாகத் தமது சொந்த நிலங்களை இழந்து முகாம்களிலும் வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வரும் வலி. வடக்கு மக்கள், இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீகக் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை எவ்வித நிபந்தனையுமின்றி மீளக் கையளிக்கக் கோரி வாராந்தம் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
பொதுமக்களின் வளமான விவசாய நிலங்களில் இராணுவத்தினர் விவசாயப் பயிர்ச்செய்கைகளிலும் உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வரும் செயற்பாடுகளுக்கு மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
