இலங்கையில் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) புதிய மற்றும் கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய விதிமுறைகளின் கீழ், சட்டவிரோதமாக ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துவோரைக் கைது ஆணையின்றி கைது செய்யும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், கட்டடங்கள் மற்றும் தொழிற்சாலைகளினால் ஏற்படும் அதிர்வுகளையும் கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்படவுள்ளன. தற்போதைய சட்டங்களின்படி, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதில்லை.
ஒலிபெருக்கிகளின் சத்தம் குறிப்பிட்ட வளாகத்திற்கு வெளியே செல்லாத வகையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சத்தத்தை எழுப்பும் வாகன ஹாரன்களைப் பயன்படுத்துவதும் சட்டவிரோதமாகும்.
2 மீற்றர் தூரத்தில் 105 டெசிபலுக்கு மேல் சத்தத்தை ஏற்படுத்தும் ஹாரன்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
ஒலி மாசுபாடு மன அழுத்தம், செவிப்புலன் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியது என்பதால், புதிய விதிமுறைகள் மூலம் விதிமீறல்களுக்கு எதிராக விரைவான மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
